Friday, April 19, 2013

வாள் கண்ணினை மலர்மதுவுண் வண்டென்று ஓட்டுகின்றாள்...



கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதிமூன்றாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




குழலிசைக்கும் யாழிசைக்கும் இனிமை அள்ளிக் கொடுக்கும்

மழலைச் சொல் மொழியாள் முருக்க மலரனைய வாயாள்

அழகு பொருந்திய குவளையிடப்பட்ட சாடியினுள் தன் கண்

நிழலைப் பார்த்து மயங்கி வண்டெனவே விரட்டுகின்றாள்...



யாழ்க்கும் இன் குழற்கும் தான் இன்பம் வழங்கும் மொழியாள்

கீழ்வாய் முருக்க மலர்வெல்லும் மழலைச் சொல்லாள் ஒருத்தி

தாள் குவளையிட்ட குளிர்மதுச் சாடியினுள் நிழல் கண்டவளும் 

வாள் கண்ணினை மலர்மதுவுண் வண்டென்று ஓட்டுகின்றாள்...



வாய்த்த சொல்லின்பம் குழலையும் யாழையும் பழிக்கவும்

சேய்த்தன் சொல்லினிமை மொழியாளும் செவ்விதழாள் 

தோய்ந்த கருங்குவளை இடப்பட்ட சாடியினுள்  வாள்கண்

பாய்ந்த நிழலைத் தான் வண்டென நினைந்து ஓட்டினாள்...



கண்டாலும் கேட்டாலும் இனிக்கும் அழகு மொழியாள் ஒருத்தி

வேண்டாதார் விரும்பும் மழலை மென் சொல்லாள் குவளைத் 

தண்டாள் மலரிட்ட மதுச் சாடியுள் வாள் கண்ணின் நிழலைக்

கண்டாள் அதனை வண்டிரண்டு வந்ததென்றவள் விரட்டினாள்...



கேட்கும் யாழும் குழலும் தடுக்கும் அவள் சொல் கொடுக்கும்

வேட்கை பொருந்திய மழலையின் மெல்லிய மொழியினாள்

ஆட்சி  செய்யும் கட்சாடியுள் குவளையை வாள்கண் நிழலின்

காட்சி எனக்கண்டவளும் விரட்டினாள் மதுவுண் வண்டென்றே!


 


பாடல்:

யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன

கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்

தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள் தன்

வாள் கணின் நிழலைக் கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள்...
 

 

விளக்கம்:

யாழின் இசைக்கும் இனிய குழலிசைக்கும் இன்பம் கொடுத்தவை

இவள் சொற்கள்  தானாம். கேட்பதற்கு மெல்லிய மழலை மொழியினையும் 

முருக்க மலரனைய சிவந்த வாயினையுடைய ஒருத்தி கருங்குவளை

மலர்களைத் தண்டோடு இட்டபட்டிருக்கும் குளிர்ந்த மதுவுள்ள சாடியினுள்

தன் வாள் போன்ற கண்ணின் நிழலைப் பார்த்து அதனை நிழல் என்று

அறியாது குவளை மலர்களில் மதுவுண்ண வந்த வண்டுகள் என்றே

ஓட்டுகின்றாள்.

கள்ளிருக்கும் சாடியினுள் குவளை, தாமரை போன்ற மலர்களை

மணத்திற்காக இட்டு வைத்தல் மரபு.

Thursday, April 11, 2013

வள்ளத்தின் கலையேறும் மதுவென்றே வாய் வைத்து நாணினாள்..​.



கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பன்னிரெண்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



உட்கொள்ளும் முன் மதுக் கிண்ணத்தில் நிலாக் கதிர்கள் 

ஆட்கொள்ளும் வண்ணத்தில் வேல் விழியாள் ஒருத்தி 

நாட்கொண்ட  மதுவின் மயக்கத்தை வாய்க் கொண்டு

நாண்கொண்டு மனதுக்குள்ளே நகைக் கொண்டாள்...



வார்க்கும்  முன் தலையேறும் மதுவின் மயக்கத்தில்

யார்க்கும் தன் வேல்விழியால் இன்னல் விளைவித்துப்  

பார்க்கும் மங்கையவள் நிலாக் கதிரில் கிண்ணமதைச் 

சேர்க்கும் வாயும் உறிஞ்சியது மதுவென்று அறியாது...



தலையேறும் மயக்கமும்  மது உண்ணும் முன்னர்

கொலையூறும் வேல்விழியாள் ஒருத்தி தன்னுள்ளே 

நிலைமீறும் நிலவின் ஒளிவெள்ளத்தில் வள்ளத்தின்

கலையேறும் மதுவென்றே வாய்  வைத்து நாணினாள்...



மறம் பொங்கும் கொலை புரியும் வேல் விழியாள் ஒருத்தி

புறம் எங்கும் மயக்கம் மனம்புரள விண்ணில் நிலவும் வெண்

நிறம் கொண்ட கதிர் வீசுமதுக் கிண்ணத்தை நிரப்பும் அந்தத்

திறம் கண்ட தானும் மதுவென்றே வாய்வைத்து உறிஞ்சினாள்...



பக்கத்தில் உள்ளவர்களைப்  பார்வையால் கொல்லும் ஒருத்தி

துக்கத்தையும் மறக்கடிக்கும் மதுக்கிண்ணத்தைக் கைப்பிடித்து

சொர்க்கத்தில் விளங்கும் நிலவொளியைத் தான் மதுவென்ற

வெட்கத்தையும் மீறி வாய்ச் சுவைக்க உண்டு மகிழ்ந்தாள் ... 



கொடுங்கண்ணாள் ஒருத்தி கொள்ளும் மயக்கத்தில் தன்

இடங்கொண்ட கிண்ணத்தில் பரவும் நிலவின் ஒளியும்

தொடும்வண்ணம் மது நிரம்பியது போல் தோன்றுமதை

விடங்கொண்ட நாகம் விழுங்குதல் போலே பருகினாள்...







பாடல்:

புறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஓர்

மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து  வெள்ளை

நிற நிலாக் கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற

நறவு என அதனை வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள்...




விளக்கம்:

கொடுமை திகழும் கொலைத் தொழிலை புரியும் வேல் போன்ற

கண்ணினை உடைய வேறு ஒரு மங்கை தான் ஏந்திய மணிகள்

பதித்த பளிங்கு மதுக் கிண்ணத்தில் வெண்ணிற நிலாக் கதிர்கள்

பாய்ந்ததனால் அந்த பளிங்குக் கிண்ணத்தில் மது நிறைந்து

இருப்பது போலத் தோன்றியதனால் மதுவென்று கருதி

அக்கிண்ணத்தை வாயில் வைத்தாள்; பக்கத்தில் உள்ளவர்கள்

எல்லோரும் வெறுங் கிண்ணத்தை இவள் வாய் வைத்து

உறிஞ்சுவது கண்டு நகைத்து இகழ தானும் தன்னுள்ளே

நாணம் மிகக் கொண்டாள்...


மது உட்புகும் முன் மயக்கம் உட்புகுந்து அதனை உட்கொள்ளும்

முன் நிலாக் கதிர்களை உட்கொண்டதால் நாணம் அவளை

ஆட்கொண்டது எனலாம்....

Thursday, April 4, 2013

பித்து பிடித்து தன் நிழலை எச்சில் நுகர்கின்றா​ய் என்றாளே!



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினொன்றாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



கண்ணெனும் வேல்தனில் நஞ்சு பூசியும்  கூந்தல் முடிந்து

பண்ணெனும் நகையுடன் நங்கையும் தள்ளாடும் நடையிலும்

கிண்ணெனும் மதுவுண்ட கிரக்கத்தில் தன்னிழல் நோக்கியே
 

உண்ணென்று  உரைக்கின்றாள் தன்னையும் தான் மறந்தே!  




இத்து விடுமெனும் இடையுடையாள் அணங்கொருத்தி

கொத்து மலர்க்கூந்தலுடன் விடம் பூசிய வேல் விழிகளும்

பூத்து குலுங்கும் புன்னகையுடன் மதுவள்ளம் தனை நோக்கி

பித்து பிடித்து தன் நிழலை எச்சில் நுகர்கின்றாய் என்றாளே!



ஒடிந்து விழும் இடையுடனே தெய்வப் பெண்ணொருத்தி

முடிந்தக் கூந்தலுடன் நஞ்சு தீட்டிய வேல் விழிகளுடன்

படிந்த முகப் புன்னகையுடன் மதுக்கிண்ணம் பார்த்துக்

கடிந்து கொண்டாள் மிச்சமுண்ணும் தன் நிழலென்றே!



அச்சுறுத்தும் மெல்லிடையாள் தன் மலர்க் கூந்தல் திருத்தியே

நச்சுறுத்தும் வேல்விழியுடனே மென்னகைக் கூடிய ஒருத்தியும்

இச்சையுடன் மதுக் கிண்ணத்தினுள் பொருந்திய தன் நிழலை

எச்சிலுடன் இருக்கும் இம் மதுவுண்ண வந்தாயோ என்றாளே...



அஞ்சும் இடையும் கெஞ்சும் நடையும் மேகக் கூந்தல் படையும்

நஞ்சும் பூசிய வேல்விழியும் புன்னகையால் பேசும் ஒருத்தி தான்

கொஞ்சம் மதுவெடுத்து அருந்துகையில் கிண்ணந்தனில் நோக்கியே

எஞ்சும் மதுவருந்த எனக்குப் போட்டியாக ஏன் வந்தாய் என்றாளே! 



தொகுத்த  கூந்தலுடன் முறியும் இடையுடனே மங்கையொருத்தி

பகுத்த வேல்விழியில்  பூசிய நஞ்சும்  புன்னகைக் கொஞ்சும் எழிலும்


மிகுந்த மதுவுண்ணும் வேளையிலே கிண்ணந்தனில் நிழல் நோக்கித்

தகுந்த இன்னொருத்தி தானுண்ட எச்சிலுண்ண வந்தாளே என்றாள்...





பாடல்:

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு அனாள் அளகபந்தி

நச்சுவேல் கருங்கண் செவ்வாய் நளிர்முகம் மதுவுள் தோன்ற

"பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க வாளா

எச்சிலை நுகர்தியோ?" என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள்.





விளக்கம்:

இது முறிந்துவிடக் கூடும் எனக் கண்டார் அஞ்சுறும் வகையில் நுண்ணிய

இடையுடையாளாய் தெய்வப் பெண் போன்றிருக்கும் ஒருத்தி தன் கூந்தல்

தொகுதியும் நஞ்சு பூசிய வேல்போன்ற கருங்கண்களும் சிவந்த வாயும்

புன்னகையோடு கூடிய முகமும் பருகும் மதுக் கிண்ணத்தில் பிரதி பிம்பமாய்

தோன்றும் அதனைப் பார்த்து பித்துப் பிடித்தவளே? நீ என்ன செய்கிறாய்

இதோ இச்சாடியில் மிகுந்த அளவில் மதுவிருக்க அதனை உண்ணாமல்

வீணே நான் உண்ட எச்சில் மதுவையா நுகர்கின்றாய் என்று தன் நிழலை

வேறொரு பெண்ணாய்க் கருதி பற்களாகிய முல்லை அரும்புகள் வெளித்

தோன்ற ஒளிரச் சிரித்தாள்...