Sunday, November 24, 2013

ஊன் மயங்கும் மதுவருந்த உறிஞ்சிக் குழலை நாடினாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பத்தொன்பதாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




வண்டுகள் மொய்க்கும் வானளாவிய கூட்டமது யாசகரும்

வேண்டுவன எல்லாமும் பெற்றிடப் பெருஞ் செல்வந்தரைக்

கண்டுகொள்ளும் பிரிவு ஆற்றாமல் வாட்டம் கண்ட ஒருத்தி

ஈண்டு கள் உறிஞ்சக் குழலை நாடினாள் வாய்ப் புகுமென்று....



வானளாவிய பெருஞ்செல்வத்தை நாடும் யாசகர் கூட்டமும்

தேனுலாவிய பூக்களில் மொய்த்திடும் வண்டுகளின் கூட்டமது

பானகம் அருந்தத் தன் செவ்வாய்த் திறந்தால் உட்புகுமென்று

தானவளும் செங்கழுநீர்க் குழலெடுத்து உறிஞ்சத் தொடங்கினாள்...



வான் விரிகின்ற பெருஞ்செல்வம் தேடும் யாசகர் போலும்

தான் பிரிகின்ற துயரம் ஆற்றாமல் கூடும் கூட்டம் போலும்

தேன் சொரிகின்ற பூவில் வண்டுகள் கண்ட ஒருத்தி மேலும்

ஊன் மயங்கும் மதுவருந்த உறிஞ்சிக் குழலை நாடினாள்...



சூசகமாய் தன் வறுமை நீங்கச் செல்வந்தரை நாடிப் பொருள்

யாசகமாய் பெறுவோரின் பிரிவு ஆற்றாமல் கூட்டம் போலும்

வாசனைப் பூக்களில் தேன் மொய்க்கும் வண்டுகள் கண்டவளும்

யோசனை கொண்டு உறிஞ்சிக் குழலெடுத்து மதுவருந்தினாள்...



போயும் பெருஞ் செல்வந்தரிடம் பெறுகின்ற யாசகர்கள் போலும்

தோயும் மலர் மொய்த்து தேன் குடிக்கும் வண்டுகளின் கூட்டமும்

வாயும் மது அருந்தத் திறந்தால் உட்புகுமென்று ஒருத்தி கருதி

சாயும் செங்கழுநீர்க் குழலெடுத்து அதன் மூலம் உறிஞ்சினாள்....






பாடல்:

வான்தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்

ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப

தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி

ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்...




விளக்கம்:

உலோபிகளிடம் பொருந்திய பெருஞ்செல்வத்தை பெறுவதற்காக விரும்பி

வந்துள்ள யாசகர்கள் போல்பிரிய மாட்டாமல் வான் அளவும் மொய்த்துக்

கொண்டுள்ள வண்டுகளின் கூட்டம் கண்ட ஒருத்தி தேன் சொரிகின்ற

தாமரைப் பூப் போன்ற தன் சிவந்த வாயை திறந்தால் வண்டுகள் உட்சென்று

விடுமென்று நாணமுற்று கிண்ணத்தில் ஊன்றி வைத்த செங்கழுநீரின்

தண்டினால் மதுவை உறிஞ்சி உண்டாள்...

வண்டுகளையும் உட்கொள்ள நேரும் அபாயம் உள்ளது மது உண்ணும்

பழக்கம் என்றதன் இழிவைச் சுட்டிக் காட்டுகிறார் கம்பன். இன்று

குளிர்பானங்களை பல்லில் படாமல் உறிஞ்சி குழலால் பருகும்

அன்றே இருந்ததை அறிக...

எண்மயக்கம் கொண்டு அதரத்தில் கிண்ணம் வைத்தாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினெட்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



கண்மயக்கம் கொள்ளும் கோல மூக்கினாள் ஒருத்தி தான்

உண்மயக்கம் கொள்ளும் மதுவாலே முன்கை நடுங்கத்

தண்மயக்கம் கொடுக்கும் மது சிந்தியதை அறியாதவளும்

எண்மயக்கம் கொண்டு அதரத்தில் கிண்ணம் வைத்தாள்...



எள்ளுப்பூ நாசியாள் ஒருத்தி முன்கை தள்ள குளிர்ந்தக்

கள்ளுப்பூ விரியும் மயக்கத்தில் மதுவும் ததும்பிச் சிந்தும்

உள்ளப்பூப் படையும் வண்ணம் மயங்கித் திளைக்கும் மது

வெள்ளத்தில் இதழின் கீழ்மேலாகக் கிண்ணம் வைத்தாள்...



மூக்குத்தி அணிந்த எள்ளுப்பூ மூக்கினாள் ஒருத்தி தன்

போக்குத்தி அறியாத மயக்கத்தில் முன்கைத் தடுமாறும்

நாக்குத்தி வழிசெல்லாது இழியும் மதுவறியாது தலைகீழ்

தூக்கிய கிண்ணத்தைத் தன் இதழில் வைத்து அருந்தினாள்...



முந்தியது மயக்கம் தரும் எள்ளுப்பூ மூக்கினாள் ஒருத்தி

அந்தியது வழங்கும் மதுவின் நினைப்பால் முன்கையில்

ஏந்தியதும் அறியாது மயக்கும் மதுவும் தன்கை மீறியதில்

சிந்தியதும் தெரியாது கிண்ணந்தனை வாய் வைத்தாள்...



ருதுவழங்கும் உருமயக்கத்தையும் மீறும் ஒருத்தித் தன்னெழில்

அதுவழங்கும் ஒருமயக்கத்தின் துணையாகக் கிண்ணந்தனிலே

மதுவழங்கும் பெருமயக்கத்திற்கு இணையாக எண்ணந்தனிலே

எதுவழங்கும் கருமயக்கமும் இதற்கீடாமோ என்று அருந்தினாள்...






பாடல்:

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி முன்கை

தள்ள தண் நறவை எல்லாம் தவசிடை உகுத்தும் தேறாள்

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உப்புறத்து உண்டு என்று எண்ணி

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள்...




விளக்கம்:

எள்ளுப் பூப்போன்ற அழகிய மூக்கினையுடையாளாய் அணிகலம் பூண்டாள்

ஒருத்தி முன்னங்கை நடுங்கியதால் குளிர்ந்த மது முழுவதும் தன் இருப்பிடத்தில்

சிந்திவிட்டதை சிறிதும் உணராதவளாய் உள்ளத்தில் உள்ள மதுவின் மயக்கத்தினால்

மதுக் கிண்ணத்தின் பின்புறத்தில் மதுவிருக்கும் என்று கருதி கிண்ணத்தை கீழ் மேலாகக்

பிடித்துக் கொண்டு மணி போன்ற சிவந்த அதரத்தில் வைத்துக் கொண்டாள்...



மயக்கத்தில் மதுவுண்டு தான் தலை கீழானாள்...

தயக்கத்தில் அதுவுண்டு தன் நிலைப் பாழனாள்...

பெண்ணகத்தைக் குளிர்வித்தால் மது வார்ப்பேனென்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினேழாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




கள்ளூற்றிய கிண்ணத்தில் தன் முகம் கண்ட மங்கையொருத்தி

உள்ளூற்றிய மதுவின் உணர்வால் மதியென மயங்கி உள்ளத்தின்

உள்வீற்றிருக்கும் துணைவனோடு ஊடல் நீங்கிய தேடல் கொண்டு

பள்ளிகொள்ள வெட்பு நீங்கிக் குளிர் தந்தால் மதுதருவேன் என்றாள்...



ஆடல் கொள்ளும் மங்கை உண்மதுவெறியில் கிண்ணத்தின் உள்

ஊடல் தெரியும் தன் முகப் பிம்பத்தை மதியெனவே நினைந்து

கூடல் கொள்ளும் பொருட்டுத் துணைவனோடு மகிழ்ந்திருக்க

சாடல் ஆனாள் தண்மதியானால் மதுவார்ப்பேன் உனக்கென்று...



கயல் விழியாள் ஒருத்தி மதுவுண்ட மயக்கத்தில் அந்தி வான

வியல் விடுத்து மதியானது கிண்ணத்தில் வீழ்ந்ததென முகச்

சாயல் கண்டு சாடினாள் வெப்பம் நீங்கிக் குளிர்வித்தால் தான்

மையல் கொண்டு மகிழ்ந்து மது உனக்கு வார்ப்பேனென்றாள்...



கிண்ணத்தில் தன் முகம் கண்ட ஒருத்தி மது மயக்கத்தில்

விண்ணகத்தின் நிலவு ஆசை கொண்டு வீழ்ந்ததெனத் தன்

எண்ணத்தில் நினைந்து துணைவனோடு காதல் கொள்ளும்

பெண்ணகத்தைக் குளிர்வித்தால் மது வார்ப்பேனென்றாள்...



உண்மது உள்ளூறிய மயக்கத்தில் தன் முகப் பிம்பத்தைப்

பெண்மதி ஒருத்தி மதுக் கிண்ணந்தனில் கண்டதும் அந்தி

விண்மதி என நினைந்து ஊடலின் பின்வரும் மையலைத்

தண்மதியாகிக் குளிர்வித்தால் மது தருவேன் என்றாளவள்...






பாடல்:

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன முகத்தை நோக்கி

விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி

'உள் மகிழ் துணைவனோடு ஊடு நாள். வெம்மை நீங்கி

தண் மதி ஆகின் யானும் தருவென் இந் நறவை' என்றாள்...




விளக்கம்:

ஒரு மங்கையானவள் கள்ளினை வார்த்த அழகிய கிண்ணத்தின் உள்ளே

கள் வெறித் தோன்றும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்டு விண்ணில்

இருக்கும் மதி மதுவின் ஆசையால் கிண்ணத்துள் மதுவுண்ண வந்து வீழ்ந்து

கிடக்கிறது என நினைத்து மன மகிழ்ச்சி கொடுக்கும் என் கணவனோடு ஊடல்

கொள்ளும் காலத்து உன் இயல்புக்கு மாறாக வெப்பம் தருவதை நீக்கி குளிர்ந்த

நிலவாக நடந்து கொள்வாயானால் இம்மதுவை உனக்கு நல்குவேன் என்றாள்...



கள்ளூறியதால் மயங்கும் நிலைக்கு மாறினாள் - உள்ளத்தில்

உள்ளூறியதால் மறக்கும் நிலைக்கு மாறினாள் - நினைவில்

விண்மதியின் இயல்பு நிலையை மாற்றினாள் - வள்ளத்தில்

பெண்மதிதன் செயல் நிலையை ஏமாற்றினாள்...

கழுத்தணி கழற்றி கூந்தலில் மாலையென சூடிக் கொண்டாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினாறாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



தலைக்கிடுவதை தன் நிலையிழந்து இடையின் மே

கலைக்கிடுவாள் மயங்கி கலையகற்றி ஆசையின்

வலைக்குள் விழுந்து கழுத்தணியை கூந்தலிடுவாள்

முலைக்கிடும் மலர்மாலைதனை இடைக்கிடுவாள்...



தடமேறிய அழகெலாம் குவிந்த இடையுடையாள் ஒருத்தி

விடமீறிய அமிழ்தினும் தீஞ்சொல்லும் தடுமாறி மயங்கி

தடமாறி இடையின் கலையகற்றி அதன் நிலையகற்றி

இடமாற்றி மலரணிந்து கழுத்தணி கூந்தல் புனைந்தாள்...




மின்னல் என நெளியும் இடையுடையாள் மது மயக்கத்தில் 

இன்னமுதச் சொல்லெடுத்து நிலை தடுமாறி இடையணிச்

சின்னமான மேகலை நீக்கி மலர் மாலை அணிந்தாளன்ன

பொன்னரி மாலைதனை சுருள்கூந்தலில் சூடிக் கொண்டாள்...



நுடங்கும் மின் இடையாள் ஒருத்தி மயங்கும் ஆசைக்குள்

அடங்கா இன் அமுதச் சொல்லிடைத் தடுமாறி இடையின்

படங்காட்டும் கலைநீக்கியதில் மலர்மாலை அணிந்தாள்

தொடர்ந்து கழுத்தணி மாலைதனை கூந்தலில் சூடினாள்...



கொழுத்த அழகிருந்து கொல்லும் மின்னல் இடையாள் ஒருத்தி

பழுத்த கனிவாய்ச் சொல்லும் தடுமாறி காலிடையின் நடுவில்

அழுத்தம் கொடுத்த கலைவிலக்கி பூமாலை அணிந்தாள் அடுத்து

கழுத்தணி கழற்றி கூந்தலில் மாலையென சூடிக் கொண்டாள்...



இருண்ட வானில் திரண்ட மின்னல் கொடி இடையாள் ஒருத்தி

மருண்ட மதுமயக்கத்தில் இனித்தவாய்ச் சொல்லும் தடுமாறி

மருங்கிலணிந்த கலைநீக்கி மலர்மாலை அணிந்து கழுத்தணி

சுருண்ட கூந்தலில் புனைந்து தடமாற்றியதை இடமாற்றினாள்...



இடையது மின்னல் பழிக்கும் பின்னற்கொடியாள் ஒருத்தி

தடையேதும் இல்லாது இன்சொலும் தடுமாறி இருகாலுக்கு

இடையணிந்த கலையகற்றி அங்கே மலர்மாலை அணிந்து

விடையேதும் இல்லாது கழுத்தணி கூந்தலில் புனைந்தாள்...






பாடல்:

மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை

இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன

வன்ன மேகலையை நீக்கி மலர்த்தொடை அல்குல் சூழ்ந்தாள்

பொன்னரி மாலை கொண்டு புரிகுழல் புனையலுற்றாள்...




விளக்கம்:

மின்னல் என நெளிகின்ற இடையினை உடையாள் ஒருத்தி வெண்ணிற

இனிய அமிழ்தம் போன்ற செவ்விய பேச்சு (மதுவின் மயக்கத்தால்)

இடையில் குழறுண்டு தனது இடைப் பகுதியில் அணிந்திரிந்த அழகிய

மேகலையைக் கழற்றி விட்டு அங்கே மலர் மாலையைச் சுற்றிக்

கொண்டாள். அதுமட்டுமல்லாது கழுத்தணியாகிய பொன் அரி மாலையை

எடுத்துச் சுருண்ட கூந்தலில் அணியத் தொடங்கினாள்.



திருக்குற்றாலக் குறவஞ்சியிலே இது மாதிரி பவனி காண வந்த

பெண்களின் நிலையை திரிகூடராசப்ப கவிராயர்.இவ்வாறு விளக்குகிறார்:


இருதனத்து ரவிக்கைதனை அரையிலுடைத் தொடுவார் பின்

இந்தவுடை ரவிக்கையென சந்தமுலைக் கிடுவார்...



மாரினில் அணிய வேண்டிய ரவிக்கையை இடையினில் அணிய வேண்டி

இடைத் தொடுவார் பின்னால் அதனை ரவிக்கையெனக் கருதி சந்தம் எழுப்பும்

முலைக்கு மேல் அணிவார் தனை மறந்த பெண்கள்...



இடையின் மே கலைக்கிடுவதை முலைக்கிடுவார்

இடையின் மேல் முலைக்கிடுவதை கலைக்கிடுவார்...

இழிகின்ற தன் பேதைமையாலே அறிவிழந்து பிடிக்க முயன்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினைந்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



வேய்ந்த பூப்பந்தலின் கீழ் பொழியும் நிலவொளியை ஆற்றில்

பாய்ந்த வெள்ளந்தனில் தோன்றும் சுழிபோலும் உந்தியாள்

காய்ந்த வயிற்றில் வழியும் மதுவென்று எண்ணித் தானும்

ஓய்ந்த மதியின் மயக்கத்திலே பிடித்து அருந்த முற்பட்டாள்....




பொதுவென்று பூந்தேன் பொழியும் பந்தலின் கீழ் மங்கையவள்

எதுவென்றும் அறியாது செழித்த நிலவொளியை மதுக்கிண்ணத்தில்

மதுவென்று அதனைப் பருகிடவும் ஆசையால் நெஞ்சம் உருகிடவும்

அதுவென்று மறந்தவளும் ஆவல் கொண்டு பிடிக்க முயன்றாள்...



அழிகின்ற ஆற்று நீர்போல் உந்திச் சுழியுடையாள் ஒருத்தி தேன்

பொழிகின்ற பூப்பந்தலின் கீழ் செழித்த நிலவொளியைப் பொங்கி

வழிகின்ற வெண்ணிற மதுவென்றே அவளும் மதுக் கிண்ணந்தனில்

இழிகின்ற தன் பேதைமையாலே அறிவிழந்து பிடிக்க முயன்றாள்...



ஆற்று நீர்த் தோன்றும் சுழிபோல் உந்தியாள் ஒருத்தி மது

ஊற்றும் கிண்ணந்தனில் தோன்றும் செழித்த நிலவின் வெண்

கீற்று தனை மதுவென்று எண்ணித் தானும் மதிமயங்கி அதை

ஏற்றும் பேதைமையாலும் அறிவிழந்தும் அருந்த முற்பட்டாள்...



உந்தியது அழியும் ஆற்றுநீர்ச் சுழி போல் கொண்ட ஒருத்தி

பந்தலின் கீழ் தேன் சொரியும் இடைவெளியில் நிலவொளியும்

முந்தியது கிண்ணந்தனில் மதுவென்று தோன்றும் பிம்பந்தனை

பந்தியிலே வைத்து அருந்த மயங்கித் தானும் பிடிக்க முயன்றாள்...



உருவாகும் ஆற்றுநீர்ச் சுழி போல் தோன்றும் உந்தியாள் ஒருத்தி

தருவாகும் பந்தலின் கீழ் தேன் பொழியும் இடைவெளியில் நிலவில்

உருவாகும் ஒளியதனை மதுவென்று எண்ணி கிண்ணந்தனில் பிடித்து

பெருகும் தன் பேதைமையாலும் மயங்கி அருந்தவும் முற்பட்டாள்...




பாடல்:


அழிகின்ற அறிவினாலோ பேதைமையாலோ ஆற்றில்

சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன்

பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரித்துக் கீழ்வந்து

இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள்...



விளக்கம்:

ஆற்று வெள்ளத்தில் உண்டாகின்ற நீர்ச் சுழியானது ஓரிடத்தில் நிலைத்து

நிற்பதைப் போன்ற கொப்பூழையுடையாள் ஒருத்தி செந்நிறத் தேனைச்

சொரிகின்ற பூக்களால் வேயப் பெற்றுள்ள பந்தலை துளைத்துக் கொண்டு

கீழிறங்கும் செழுமை மிக்க நிலவொளியை மதுவுண்டதனால் அறிவு

அழிந்ததனாலோ இல்லைப் பெண்களுக்கே உரிய பேதைமைக் குணத்தினாலோ

மதுவென்று மயங்கி மதுக் கிண்ணந்தனில் பிடிக்க முயன்றாள்...

நீபயம் கொள்ள வேண்டாம் நான் இருக்கிறேன் என்கின்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினான்காவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



பாம்புக்கு அஞ்சிய நிலவை மதுவினில் கண்ட மங்கை ஒருத்தி அதுவும்

பிம்பம் என்று அறியாது அவளும் மயங்கிக் கண் பொருத்தி அதற்கும்

தான்புக்க இடம் தந்து காப்பதாகவும் இனியும் அஞ்சாமல் எதற்கும்

வான்புக்க வேண்டாம் நானிருக்கின்றேன் என்று கட்டளையிட்டாள்...




களித்த மங்கையவள் கண் மயங்க கனங்குழை செவியிலே முயங்க

புளித்த கள்ளின் போதையிலே அதனுள்ளே தோன்றுகின்ற மதிக்கும்

அளித்தனள் அபயம் பாம்புகளுக்கு அஞ்சியே நிலவும் வந்தங்கே

ஒளிந்ததைக் கண்டு அஞ்சாதே! என்று இன்மொழிகள் கூறினாள்...



உபாயம் அளித்து உள்ளுக்குள் மயங்கும் மதுவின் காட்சியில்

அபாயம் என்ற பாம்புகளுக்கு அஞ்சிய நிலவும் கிண்ணந்தனில்

அபயம் என்றே ஒளிந்ததென்று அவளும் அதனைப் பார்த்து

நீபயம் கொள்ள வேண்டாம் நான் இருக்கிறேன் என்கின்றாள்...



குழையணிந்த ஒருத்தி தானும் மதுவருந்திய மயக்கத்தின்

பிழையறியாது மதுவினுள் தோன்றும் நிலவின் பிம்பத்தை

குழைந்து இரக்கம் கொண்டு அரவுக் கஞ்சிய நிலவின்பயம்

கழைந்திட அவளும் அஞ்சாதே என்று அபயம் அளித்தனள்...



கண் மயங்கும் கனங்குழையாள் ஒருத்தி மதுவினுள் அந்தி

விண் மயங்கும் நிலவும் விழுங்க வரும் பாம்புக்கு அஞ்சியே

வீண் பயந்து புகுந்ததென்றும் தானதற்கு தஞ்சம் அளிக்கவல்ல

பண் மயங்கும் மொழிகள் கூறி வானெதற்கு என்று தேற்றினாள்...



கனங்குழை காற்றிலாட மயங்கும் கண் மது ஊற்றிலாட கொடுஞ்

சினங்கொண்ட அரவினுக்கு அஞ்சிய நிலவும் மதுவினுள் தோன்ற

மனங்குழை மங்கையவள் அஞ்சாதே அரவு கண்டு இரவு உண்டு

தனங்கொண்ட நான் உனக்கு தஞ்சம் அளிப்பேன் என்று கூறினாள்...





பாடல்:

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனங்குழை கள்ளின் உள்ளால்

வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி

அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து

ஒளித்தனை; அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்துகின்றாள்...




விளக்கம்:


அங்கே பொன்னாலியென்ற குழையணிந்த ஒருத்தி மதுவின் உள்ளே

பிரதிபலித்துத் தோன்றுகின்ற அழகிய நிலவின் பிம்பத்தை மதுவுண்டதனால்

வந்த களிப்பு தன கண்களில் தோன்றுமாறு பார்த்து மதியே நீ வானத்தில்

உன்னைத் தீண்ட வரும் பாம்புகளுக்கு அஞ்சியே இங்கு வந்து ஒளிந்திருக்கிறாய்,

ஆகையால் நான் உனக்கு அபயம் அளித்தேன் எனவும் அஞ்சாதே நான் இருக்கிறேன்

என்று இனிய மொழிகளும் கூறுகின்றாள்.

Friday, April 19, 2013

வாள் கண்ணினை மலர்மதுவுண் வண்டென்று ஓட்டுகின்றாள்...



கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதிமூன்றாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




குழலிசைக்கும் யாழிசைக்கும் இனிமை அள்ளிக் கொடுக்கும்

மழலைச் சொல் மொழியாள் முருக்க மலரனைய வாயாள்

அழகு பொருந்திய குவளையிடப்பட்ட சாடியினுள் தன் கண்

நிழலைப் பார்த்து மயங்கி வண்டெனவே விரட்டுகின்றாள்...



யாழ்க்கும் இன் குழற்கும் தான் இன்பம் வழங்கும் மொழியாள்

கீழ்வாய் முருக்க மலர்வெல்லும் மழலைச் சொல்லாள் ஒருத்தி

தாள் குவளையிட்ட குளிர்மதுச் சாடியினுள் நிழல் கண்டவளும் 

வாள் கண்ணினை மலர்மதுவுண் வண்டென்று ஓட்டுகின்றாள்...



வாய்த்த சொல்லின்பம் குழலையும் யாழையும் பழிக்கவும்

சேய்த்தன் சொல்லினிமை மொழியாளும் செவ்விதழாள் 

தோய்ந்த கருங்குவளை இடப்பட்ட சாடியினுள்  வாள்கண்

பாய்ந்த நிழலைத் தான் வண்டென நினைந்து ஓட்டினாள்...



கண்டாலும் கேட்டாலும் இனிக்கும் அழகு மொழியாள் ஒருத்தி

வேண்டாதார் விரும்பும் மழலை மென் சொல்லாள் குவளைத் 

தண்டாள் மலரிட்ட மதுச் சாடியுள் வாள் கண்ணின் நிழலைக்

கண்டாள் அதனை வண்டிரண்டு வந்ததென்றவள் விரட்டினாள்...



கேட்கும் யாழும் குழலும் தடுக்கும் அவள் சொல் கொடுக்கும்

வேட்கை பொருந்திய மழலையின் மெல்லிய மொழியினாள்

ஆட்சி  செய்யும் கட்சாடியுள் குவளையை வாள்கண் நிழலின்

காட்சி எனக்கண்டவளும் விரட்டினாள் மதுவுண் வண்டென்றே!


 


பாடல்:

யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன

கேட்கும் மென் மழலைச் சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்

தாள் கருங் குவளை தோய்ந்த தண் நறைச் சாடியுள் தன்

வாள் கணின் நிழலைக் கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள்...
 

 

விளக்கம்:

யாழின் இசைக்கும் இனிய குழலிசைக்கும் இன்பம் கொடுத்தவை

இவள் சொற்கள்  தானாம். கேட்பதற்கு மெல்லிய மழலை மொழியினையும் 

முருக்க மலரனைய சிவந்த வாயினையுடைய ஒருத்தி கருங்குவளை

மலர்களைத் தண்டோடு இட்டபட்டிருக்கும் குளிர்ந்த மதுவுள்ள சாடியினுள்

தன் வாள் போன்ற கண்ணின் நிழலைப் பார்த்து அதனை நிழல் என்று

அறியாது குவளை மலர்களில் மதுவுண்ண வந்த வண்டுகள் என்றே

ஓட்டுகின்றாள்.

கள்ளிருக்கும் சாடியினுள் குவளை, தாமரை போன்ற மலர்களை

மணத்திற்காக இட்டு வைத்தல் மரபு.

Thursday, April 11, 2013

வள்ளத்தின் கலையேறும் மதுவென்றே வாய் வைத்து நாணினாள்..​.



கம்பராமாயணம், பாலகாண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பன்னிரெண்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



உட்கொள்ளும் முன் மதுக் கிண்ணத்தில் நிலாக் கதிர்கள் 

ஆட்கொள்ளும் வண்ணத்தில் வேல் விழியாள் ஒருத்தி 

நாட்கொண்ட  மதுவின் மயக்கத்தை வாய்க் கொண்டு

நாண்கொண்டு மனதுக்குள்ளே நகைக் கொண்டாள்...



வார்க்கும்  முன் தலையேறும் மதுவின் மயக்கத்தில்

யார்க்கும் தன் வேல்விழியால் இன்னல் விளைவித்துப்  

பார்க்கும் மங்கையவள் நிலாக் கதிரில் கிண்ணமதைச் 

சேர்க்கும் வாயும் உறிஞ்சியது மதுவென்று அறியாது...



தலையேறும் மயக்கமும்  மது உண்ணும் முன்னர்

கொலையூறும் வேல்விழியாள் ஒருத்தி தன்னுள்ளே 

நிலைமீறும் நிலவின் ஒளிவெள்ளத்தில் வள்ளத்தின்

கலையேறும் மதுவென்றே வாய்  வைத்து நாணினாள்...



மறம் பொங்கும் கொலை புரியும் வேல் விழியாள் ஒருத்தி

புறம் எங்கும் மயக்கம் மனம்புரள விண்ணில் நிலவும் வெண்

நிறம் கொண்ட கதிர் வீசுமதுக் கிண்ணத்தை நிரப்பும் அந்தத்

திறம் கண்ட தானும் மதுவென்றே வாய்வைத்து உறிஞ்சினாள்...



பக்கத்தில் உள்ளவர்களைப்  பார்வையால் கொல்லும் ஒருத்தி

துக்கத்தையும் மறக்கடிக்கும் மதுக்கிண்ணத்தைக் கைப்பிடித்து

சொர்க்கத்தில் விளங்கும் நிலவொளியைத் தான் மதுவென்ற

வெட்கத்தையும் மீறி வாய்ச் சுவைக்க உண்டு மகிழ்ந்தாள் ... 



கொடுங்கண்ணாள் ஒருத்தி கொள்ளும் மயக்கத்தில் தன்

இடங்கொண்ட கிண்ணத்தில் பரவும் நிலவின் ஒளியும்

தொடும்வண்ணம் மது நிரம்பியது போல் தோன்றுமதை

விடங்கொண்ட நாகம் விழுங்குதல் போலே பருகினாள்...







பாடல்:

புறம் எலாம் நகைசெய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஓர்

மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து  வெள்ளை

நிற நிலாக் கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற

நறவு என அதனை வாயின் வைத்தனள்; நாண் உட்கொண்டாள்...




விளக்கம்:

கொடுமை திகழும் கொலைத் தொழிலை புரியும் வேல் போன்ற

கண்ணினை உடைய வேறு ஒரு மங்கை தான் ஏந்திய மணிகள்

பதித்த பளிங்கு மதுக் கிண்ணத்தில் வெண்ணிற நிலாக் கதிர்கள்

பாய்ந்ததனால் அந்த பளிங்குக் கிண்ணத்தில் மது நிறைந்து

இருப்பது போலத் தோன்றியதனால் மதுவென்று கருதி

அக்கிண்ணத்தை வாயில் வைத்தாள்; பக்கத்தில் உள்ளவர்கள்

எல்லோரும் வெறுங் கிண்ணத்தை இவள் வாய் வைத்து

உறிஞ்சுவது கண்டு நகைத்து இகழ தானும் தன்னுள்ளே

நாணம் மிகக் கொண்டாள்...


மது உட்புகும் முன் மயக்கம் உட்புகுந்து அதனை உட்கொள்ளும்

முன் நிலாக் கதிர்களை உட்கொண்டதால் நாணம் அவளை

ஆட்கொண்டது எனலாம்....

Thursday, April 4, 2013

பித்து பிடித்து தன் நிழலை எச்சில் நுகர்கின்றா​ய் என்றாளே!



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினொன்றாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



கண்ணெனும் வேல்தனில் நஞ்சு பூசியும்  கூந்தல் முடிந்து

பண்ணெனும் நகையுடன் நங்கையும் தள்ளாடும் நடையிலும்

கிண்ணெனும் மதுவுண்ட கிரக்கத்தில் தன்னிழல் நோக்கியே
 

உண்ணென்று  உரைக்கின்றாள் தன்னையும் தான் மறந்தே!  




இத்து விடுமெனும் இடையுடையாள் அணங்கொருத்தி

கொத்து மலர்க்கூந்தலுடன் விடம் பூசிய வேல் விழிகளும்

பூத்து குலுங்கும் புன்னகையுடன் மதுவள்ளம் தனை நோக்கி

பித்து பிடித்து தன் நிழலை எச்சில் நுகர்கின்றாய் என்றாளே!



ஒடிந்து விழும் இடையுடனே தெய்வப் பெண்ணொருத்தி

முடிந்தக் கூந்தலுடன் நஞ்சு தீட்டிய வேல் விழிகளுடன்

படிந்த முகப் புன்னகையுடன் மதுக்கிண்ணம் பார்த்துக்

கடிந்து கொண்டாள் மிச்சமுண்ணும் தன் நிழலென்றே!



அச்சுறுத்தும் மெல்லிடையாள் தன் மலர்க் கூந்தல் திருத்தியே

நச்சுறுத்தும் வேல்விழியுடனே மென்னகைக் கூடிய ஒருத்தியும்

இச்சையுடன் மதுக் கிண்ணத்தினுள் பொருந்திய தன் நிழலை

எச்சிலுடன் இருக்கும் இம் மதுவுண்ண வந்தாயோ என்றாளே...



அஞ்சும் இடையும் கெஞ்சும் நடையும் மேகக் கூந்தல் படையும்

நஞ்சும் பூசிய வேல்விழியும் புன்னகையால் பேசும் ஒருத்தி தான்

கொஞ்சம் மதுவெடுத்து அருந்துகையில் கிண்ணந்தனில் நோக்கியே

எஞ்சும் மதுவருந்த எனக்குப் போட்டியாக ஏன் வந்தாய் என்றாளே! 



தொகுத்த  கூந்தலுடன் முறியும் இடையுடனே மங்கையொருத்தி

பகுத்த வேல்விழியில்  பூசிய நஞ்சும்  புன்னகைக் கொஞ்சும் எழிலும்


மிகுந்த மதுவுண்ணும் வேளையிலே கிண்ணந்தனில் நிழல் நோக்கித்

தகுந்த இன்னொருத்தி தானுண்ட எச்சிலுண்ண வந்தாளே என்றாள்...





பாடல்:

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு அனாள் அளகபந்தி

நச்சுவேல் கருங்கண் செவ்வாய் நளிர்முகம் மதுவுள் தோன்ற

"பிச்சி நீ என் செய்தாய்? இப் பெரு நறவு இருக்க வாளா

எச்சிலை நுகர்தியோ?" என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள்.





விளக்கம்:

இது முறிந்துவிடக் கூடும் எனக் கண்டார் அஞ்சுறும் வகையில் நுண்ணிய

இடையுடையாளாய் தெய்வப் பெண் போன்றிருக்கும் ஒருத்தி தன் கூந்தல்

தொகுதியும் நஞ்சு பூசிய வேல்போன்ற கருங்கண்களும் சிவந்த வாயும்

புன்னகையோடு கூடிய முகமும் பருகும் மதுக் கிண்ணத்தில் பிரதி பிம்பமாய்

தோன்றும் அதனைப் பார்த்து பித்துப் பிடித்தவளே? நீ என்ன செய்கிறாய்

இதோ இச்சாடியில் மிகுந்த அளவில் மதுவிருக்க அதனை உண்ணாமல்

வீணே நான் உண்ட எச்சில் மதுவையா நுகர்கின்றாய் என்று தன் நிழலை

வேறொரு பெண்ணாய்க் கருதி பற்களாகிய முல்லை அரும்புகள் வெளித்

தோன்ற ஒளிரச் சிரித்தாள்...

Thursday, March 28, 2013

உவகையுடன் தோழியை மதுவுண்ண அழைப்பதென்​ன...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பத்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



மதுவுண்டால் ஏற்படும் தடுமாற்றங்களும் மயக்கத்தில்

அதுவுண்டால் தொடரும் நிழலின் தடமாற்றங்களும்

எதுவுண்டாலும் வருவதில்லையென மடங்கொண்டு

மாதுவுண்டாலும் தோற்குமே அத்தனையும் அங்கே!





விடத்தைப் பழிக்கும் விழிகளும் அமிழ்தென இனிக்கும் மொழிகளும்

இடத்தை விட்டு விலகா மகளிரும் வாள் பழிக்கும் நெற்றியுடன் தன்

தடத்தைப் பழிக்கும் நிழலை பொன்மதுக் கிண்ணத்தில் நோக்கும்

மடத்தை விட்டு அகலாது தோழியை  உண்ண அழைப்பதென்ன...



விரும்பாதார்க்கு விடம்போல் விழியும் தன்னழகைப் பார்த்துத் 

திரும்பாதார்க்கு தடம்போல் நிழலுடைய மகளிரும் காதல்மனம்

அரும்பாதார்க்கு கரும்பென இனிக்கும் மொழியும் பேசி மதுவுண்ண 

பெரும்பாலும் கிண்ணந்தனைக் கண்டு தோழியை அழைப்பதென்ன...  



விடம் கொண்ட விழிகளும் பலவிதம் செய்யும் முன்னழகின்

தடம் கொண்ட நிழலினை மதுகிண்ணத்தில் கண்ட மகளிரும் 

மடம் கொண்ட நோக்கிலே தன் தோழியரை உண்பதற்கு தன்

இடம் கொண்ட மதுவுண்ண மயங்கி தானும் அழைப்பதென்ன...



விரியாத மலர்மொக்கனைய நஞ்சுமிழும் விழிகளும் தெரிந்தும்

தெரியாத தன்னழகை மீட்டும் நிழலை மதுக்கிண்ணத்தில் கண்டுப்

புரியாத மயக்கம் தானும் கொண்டு தோழியை துணைக்கழைத்துப்

பிரியாத மடத்தைப் பேணும் விதத்தில் பேதையும் திகழ்வதென்ன...



வாள் நுதல் மங்கையொருத்தி மதுவுண்ணும் மயக்கத்தில் தன்

தாள் முதல் தலை வரை தள்ளாடும் அதன் இயக்கத்தில் பொன்

வள்ளத்திலே தன்னிழல் கண்டு தன்னிகரில்லா அழகைக் கொண்ட 

உள்ளத்திலே உவகையுடன்  தோழியை உண்ண அழைப்பதென்ன...





பாடல்:

விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்சொலார்தம்

மடன் ஒக்கும் மடனும் உண்டே? - வாள் நுதல் ஒருத்தி காணா

தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து

உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி! என்றாள்...





விளக்கம்:

வாள் போன்று ஒளி பொருந்திய நெற்றியுடையாள் ஒருத்தி தன்னை போலே

அழகின் பெருமையை ஒத்திருக்கும் தனது நிழலை பொன்னால் செய்யப்பட்ட

குளிர்ந்த மணமுள்ள மதுவுண்ணும் கிண்ணத்தில் கண்டு தோழியே! என்னோடு

சேர்ந்து நீயும் இம்மதுவை உண்ணுவாய்! என்று வேண்டினாள்.

விரும்பாதார்க்கு நஞ்சனைய நீண்ட விழிகளையும் உண்பார் தம்மை நீண்டு

வாழ்விக்கும் அமிழ்தம் போலவும் கேட்பார் தம் செவிக்கு நெடு நாள் இனிக்கும்

இன்மொழியும் உடைய மகளிருடைய அறியாமை போன்ற அறியாமை வேறு

எவரிடத்தும் உண்டோ?

Saturday, March 23, 2013

தகிக்கும் காமக்கனலைத் தூண்டிச் சுடர்விடச் செய்தது...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

ஒன்பதாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



இரவினிலே நிலவெரியும் ஒளி வெள்ளத்தின்

வரவினிலே மனமயங்கி மதுவுண் வள்ளத்தின்

பரப்பினிலே வலம்வந்து காமத் தணல் மூட்டி

நிரப்பியதன் நெருப்பினிலே கரைந்தது மதுவும்...



யாமம் தனிலே மகளிரும்  கூந்தலில் மலர் அகில்மிகைத்

தூமம் இட்டு மோகந்தொட்டு அருந்துகின்ற வெண் மதுவும்

ஓமம் தனிலே விழுந்துருகும் நெய்யெனவே  மெய்யுருக்கும்

காமக் கனலிலே தாகந்தொட்டு விழுந்துருகிக் கரைந்தது...



அகில் புகையூட்டி கூந்தலுக்கு மலர்சூடிய மகளிருள்  

வகிக்கும் மோகத்தை நிறைக்க வெண்ணிற மதுவை

சுகிக்கும் மிகையூட்டி ஓமத்தில் வார்த்த நெய்யனவே

தகிக்கும் காமக்கனலைத் தூண்டிச் சுடர்விடச் செய்தது...



மேகக் கூந்தலில் மலர்சூடி அகில்தூமமிட்ட மகளிரும்

தேகந் தனிலே சூடேற்ற அருந்திய வெண்ணிற மதுவும் 

தாகந் தணியாமல் எழுந்த காமக் கனலானது எரியும்

யாகக் குண்டந்தனிலே விழுந்துருகும் நெய்யாகியது...



புகைகூட்டிய அகில் மணமிட்டதோடு  மகளிரும் தம்மெழில் 

சிகைகூட்டியதில் மலர்பல அணிந்து வெண்மது அருந்தியதன் 

வகைகூட்டிய உணர்வும் கொதிக்கும் ஓமத்தில் நெய்யென

மிகைகூட்டியதில் காமக் கனலை நெஞ்சந்தனில் மூட்டியது...



குழலினிலே அகில்புகைக்காட்டி வாரிப் பூச்சூடிய மகளிரும்  

மழலைத் தான் மயங்கும் பாலையொத்த மதுவும் அருந்தியது 

தழலினிலே வார்க்கும் ஓம நெய்யெனவே உருகிய இரவின் 

சூழலும் காமத் தணலுக்கு மெய் வார்த்ததைப்  போலிருந்தது...





பாடல்:

தாமமும் நானமும் ததைந்த தண் அகில்

தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை

ஓம வெங் குழி உகு நெய்யின் உள் உறை

காம வெங் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே...


 
விளக்கம்:

மலர்மாலையும் புனுகும் நிறைந்திருக்க அகில் புகையூட்டபட்ட

கூந்தலையுடைய மகளிர் உண்ட தூய்மையான மதுவானது

கனல் நிறைந்த யாகக் குண்டத்திலே பெய்த ஓம நெய்யைப்

போன்று அவர்தம் உள்ளத்தினுள்ளே உறைகின்ற கொடிய காமக்

கனலினை மேலும் சூடேற்ற செய்தது.

நலிந்த இடையில் மயக்கம் நிரப்பும் அமிழ்தானது மதுவும்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

எட்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



மதுவின் குணமும் மங்கையவள் கைக்கொண்ட கிண்ணமும்

பொதுவில் சிவந்து விளங்கியதையும் உண்டதும் அதன்முன்

எதுவும் ஈடு இணையில்லை என்று மைக்கொண்ட செவ்விழியும்

மதுவும் மாதவளின் உள் திறமையை எடுத்து உரைக்குமன்றோ!



தாகம் கொண்டு மதுவிருக்கும் கிண்ணத்தைப் பருகவெழில் 

தேகம் கொண்ட மடந்தைக் கரம் தூக்கியதால் சிவந்ததோடு

மோகம் கொண்ட மைக்கண்ணும் சிவந்திட உருகியதுவும்

யாகக் குண்டம் தனில் விழும் தேனெனும் அமிழ்தமானது...



தகுந்த அழகு மங்கைத் தன் கைக்கொண்டு தூக்கிய மது

மிகுந்த கிண்ணம் தானும் சிவந்ததோடு அல்லாமல் உள்

புகுந்து மயங்கும் மைக்கண்ணும் செந்நிறம் ஆக்கிய அது

வகுந்து உடலெங்கும் பரவசம் காணும் அமிழ்தமானது...



வலிந்த தாகத்தில் மங்கையும் மது பருகும் கிண்ணத்தைப் 

பொலிந்த தேகத்தின் செங்கையும் பட சிவக்கப் பருகப்பருக

மெலிந்த  நடையில் மைக்கண்ணும் சிவந்து உருக உருக

நலிந்த இடையில் மயக்கம் நிரப்பும் அமிழ்தானது அதுவும்...



கைக்கொண்ட மங்கையவளின்  மதுக் கிண்ணம் சிவக்கவும்

கைக்கது அமிழ்தம் போல் விளங்கும் மயக்கத்தின் துவக்கமும்

மைக்கொண்ட விழிகளும் மதுவுண்டதால் சிவந்து உவக்கவும்

வைக்கும்  உள்ளமதில் ஏதோதோ உணர்வுகளைத் தைக்கும்...



வாய்வழிப் புகுந்த மங்கையவள் அருந்திய மதுவானது

வளைக் கரம்பட்டதால் சிவந்த கிண்ணமும் மயக்கத்தில்

மைவிழியும் சிவக்கக் கொங்கையும் மோகத்தில் மெதுவாக

மையலை உட்கொண்டு உவகையில் திரண்டது அமிழ்தமாய்...





பாடல்:

உக்க பால்புரை நறா உண்ட வள்ளமும்

கைக்கொள் வாள் ஒளிப்படச் சிவந்து காட்ட தன்

மைக்கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழிப்

புக்க தேன் அமிழ்தமாய்ப் பொலிந்த போன்றவே...


 
விளக்கம்:

ஒரு மங்கையின் வாய் வழியாகப் புகுந்த மதுவானது அமிழ்தமாக

அவளுக்குள் விளங்கியது. சிந்திய பாலினை ஒத்து நிற்பது போன்ற

வெண்ணிற மதுவினை ஏந்திய மதுக்கிண்ணமும் சிவந்த கைகளால்

மதுவை எடுத்துப் பருக முற்பட்டதால் சிவந்து தோன்றியது. அவளுடைய

கருமை பூசிய கண்ணும் மதுவின் வேகத்தால் சிவந்து காணப்பட்டது.

பூவிதழில் தேனுலவித் ததும்பும் அமிழ்தெனும் கள்ளருந்தி​னார்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

ஏழாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



ரம்பா ஊர்வசி மேனகையையும் வியத்தகு மங்கயரையும்

வம்புக் கிழுத்து ஊனுடற்கொண்டு அழகினைத் தாக்கும்

அம்பால் விழியும் மான்வென்றுத் தான்வெல்லும் நோக்கில்

தேம்பால் வழிந்திடும் பூவிதழால் மது அருந்தி மகிழ்ந்தனர்... 



விண்மீனுடைய வானுலக தேவியரும் வித்தியாதர பூவையரும்

பெண்ணுடல் எடுத்து வந்தால் பொருந்தாப் பேரழகுப் பாவையரும்

கண்மானை வெல்லும் விழியுடனே நோக்கித் தேன்வழியும் மலர்க்

கிண்ணவாயில் தேன்மாரி விழுந்திடவே மதுவெடுத்து அருந்தினர்....



மீனுடை உலவும் மங்கையரும் தோற்கும் வண்ணம்

ஊனுடை உடம்பெடுத்தும் ஒப்பிலாது ஏற்கும் உருவம் 

மானுடை விழிவெல்லும் மகளிர் தம் மலர்வாய்த்

தேனுடை வழியும் இடை பொழியும் மதுவருந்தினர்...



தேவலோக மங்கையரும் விந்தையான பேரழகின்

தேகம் கொண்டும் மகளிர்க்கு ஒப்பாமல் விழியழகில்

காவுலவும் மான்வெல்லும் பார்வையிலே பூவிதழில்

தேனுலவித்  ததும்பும் அமிழ்தெனும் கள்ளருந்தினார்...



வானுலக அரம்பையரும் வித்தார மங்கையரும்

ஊனுலவும் உருக்கொண்டு இம்மகளிர்க்கு ஒப்பிலா

மானுலவும் விழிவென்று அழகிய பூவிதழ் ஒழுகும்

தேனுலவும் தேனிடை வழியவே  மதுவருந்தினர்...



வான்தேரின் வனிதையரும் வித்தகப் புனிதையரும்

ஊன்தேரின் உருக்கொண்டு உலவும் இணையில்லாத் 

தான்போரில் வெல்லும் மான்விழியால் மங்கையரும்

தேன்மாரிப்  பொழியும் பூவிதழால் கள்ளருந்தினார்....





பாடல்:

மீனுடைய விசும்பினார் விஞ்சை நாட்டவர்

ஊனுடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார்

மானுடை நோக்கினார் வாயின் மாந்தினார்

தேனுடைய மலரிடைத் தேன் பெய்தென்னவே...



விளக்கம்:

விண்மீன்கள் நிலவும் வானுலக மங்கையரும் வித்தியாதர உலகத்து

வித்தியாதர மகளிரும் ஊனுடம்பு உடையவராகி உருவம் கொண்டு

எழுந்து வந்தால் இம்மகளிர்க்கு அழகிலே ஒப்பாகார்.

விழியழகிலே மானை வென்ற மங்கையர் தேனையொத்த மலர்வாயில்

தேன்மாரி பொழிந்தார் போல தன் வாயால் மதுவருந்தினர்...

தூக்கிய பொற்கிண்ணத்​தில் இதழ்கள் நனைந்திட அருந்தினர்​...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

ஆறாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...


கம்பனின் கற்பனை வளத்தை உங்கள் மத்தியிலே கொண்டு வருவது

கம்பனுக்கு நான் செய்யும் சிறு தொண்டு என நினைக்கிறேன்...



மருகத் தொடங்கும் பூ மணத்தினராய்  ஊனுடல் உள்ளமும்

உருகத் தொடங்கும் இனத்தவரான பாவையரும் மஞ்சத்தில்

பெருகத் தொடங்கிய கலவியெனும் போரிலே வெற்றி பெறப் 

பருகத் தொடங்கிய மதுவெனும் அமிழ்தம் தனில் மிதந்தனர்...



தேக்கிய மணங்கமழும் பூவையரும் இன்பத்தின் இலக்கைத்

தாக்கிய போரிலே கூடிய  மஞ்சத்தில் வென்றிட அமிழ்தென

ஆக்கிய மதுவை அப்போரிலே வெல்லும் வேட்கையில்

தூக்கிய பொற்கிண்ணத்தில் இதழ்கள் நனைந்திட அருந்தினர்...



நெஞ்சத்தில் விளைந்த ஆசையுடன் பாவையரும் கூடும்

மஞ்சத்தில் வளைந்து தாமும் வென்றிட உள்ளமும் ஆடும்

ஊஞ்சலில் அங்குமிங்கும் ஆடியசைந்து அருந்திய மதுவின்

கொஞ்சலில் எங்குமின்பம் தேடியதில் பொருந்திக் களித்தனர்....



சுருங்கி விரியும் ஆசையுடன் மகளிரும் பூமஞ்சம் தனில்

நெருங்கிப் புரியும் கலவிப் போரிலே வென்றிடத் தாமும்

பொருந்திப் பிரியும் இன்பம்  தேடிட அமிழ்தெனும் மது

அருந்திச் சரியும் இளமையுடன் இரவைக் களித்தனர்...



துடிக்கும் உணர்வின் இன்பத் தவிப்புடன் மகளிர்தம் இளமை

நடிக்கும் கலவி நாடகத்தில் களிப்புடன் வென்றிடவே இதழில்

வடிக்கும் மதுவும் கரைந்து இடையிடை இறங்கிஏறி முடிவில்

மடிக்குள் கலக்க மன்றாடிக் கொண்டாடியங்கு வென்றாடினர்...





பாடல்:

பூக்கமழ் ஓதியர் போது போக்கிய

சேக்கையின் விளை செருச் செருக்கும் சிந்தையர்

ஆக்கிய அமிழ்து என அம்பொன் வள்ளத்து

வக்கிய பசு நறா மாந்தல் மேயினர்.



விளக்கம்:


பூக்களின் மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்டிர் மலர்கள் பரப்பிய

மஞ்சத்திலே கலவி புரியும் போரிலே கூடிக் களிக்கும் ஆவலுடைய மனத்தினராய்

அப்போரிலே வெல்வதற்கென ஆக்கப்பட்ட அமிழ்தம் போல அழகிய பொன்வண்ணக்

கிண்ணத்தில் ஊற்றிய மதுவை பருகத் தொடங்கினர்.

மயங்கித் திளைக்க மகளிர் நோக்கியங்கே விரைந்தனர்​...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

ஐந்தாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...


மது அருந்துவதற்காக மகளிர் சென்று தங்கியிருந்த இடங்களின்

வருணணையே கீழ்வருமாறு காண்க...



கூட்டம் கூட்டமாய் மகளிரும் நறுமணம் பூத்துக் குலுங்கும்

தோட்டங்களிலும் பளிங்கு அறைகளிலும் மது அருந்தியங்கு 

ஆட்டம் பாட்டமாய்க் கொண்டாடிக் களித்திடவும் ததும்பும்

நாட்டத்துடன்  நாழிகை கடத்திடாமல் விரைந்து சென்றனர்...



முத்துப் பந்தலானது விண்ணில் ஒளிர்கின்ற விண்மீனை

ஒத்தும் நெருங்கித் தவழ்கின்ற மேகம் தங்கும் திரைகளும்

அத்துடன் குளங்களைப் போலிலங்கும் பளிங்கறைகளும்

பூத்து மணக்கும் மலர்ப்பந்தலிலும் மகளிர் சென்று தங்கினர்...



ஒளிர்கின்ற விண்மீனை ஒத்த முத்துப் பந்தலும் வந்து

ஒளிகின்ற மேகக் கூட்டங்கள் தங்கும் திரைச்சீலைகளும்

மிளிர்கின்ற குளங்கள் போல் விளங்கும் பளிங்கறைகளும்

துளிர்க்கின்ற மணம்பரவும் பூப்பந்தலை மகளிர் அடைந்தனர்...



முத்துப்  பந்தலின் கீழும் தாகம் எடுக்கும் மோகன வாய்ச்

சொத்துக்கு சொந்தம் தேடிய மகளிரெல்லாம் ஏகமனதாய்

பூத்துக் குலுங்கும் மலர்ச் சோலைகளிலும்  காமத்தின்

வித்துக்கு  மதுவார்த்திட மயங்கித் தியங்கிச் சென்றனர்...



தயங்கி மின்னும் தாரகைப் போன்ற முத்துப்  பந்தலும்

இயங்கி வரும் காரதனை தழுவும் திரைச்  சீலைகளும்

முயங்கி வழியும் குளம் போல்மின்னும் பளிங்கறைகளும்

மயங்கித் திளைக்க மகளிர் நோக்கியங்கே விரைந்தனர்...




 
பாடல்:

தயங்கு தாரகை புரை தரள நீழலும்

இயங்கு கார் மிடைந்த கா எழினிச் சூழலும்

கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்

வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார்.
 


விளக்கம்:

ஒளிர்கின்ற விண்மீன்களை போன்று விளங்கும் முத்துப் பந்தலின் நிழலிலும்

வானில் தவழும் மேகங்கள் நெருங்கித் தங்குகின்ற திரைச் சீலையிட்ட இடங்களிலும்

குளங்கள் போல் ஒளிர்கின்ற பளிங்கறைகள் கொண்ட தோட்டங்களிலும்

பூத்து மணம் குலுங்கும் மலர்ப் பந்தல்களிலும் சென்று மதுவருந்துவதற்காக

மகிளிர் தங்கியிருந்தனர்.

வெள்ளணி விழாவென இருந்தது கள்ளருந்து​ம் கூடம்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

நான்காவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



தசரதனின் சேனைகள் யாவரும் மற்றும் கொண்டு வந்த யாவையும்

தேங்கியிருந்த கூடமானது வெண்ணிலவின் ஒளியை வாரி இறைத்துக்

கொண்டிருந்து மகரக் கொடியேந்திய மன்மதனுக்கு பிறந்த நாள்

கொண்டாடுவதைப் போல் கோலாகலமாய் அமைந்தது எனலாம்...





இகழ்தலும் யாரையும் யாவரும் திசைகள்தோறும் எண்ணிப்

புகழ்தலும் வெண்ணிலவின் ஒளியெங்கும் பரவும் வண்ணம்

நிகழ்தலும் கள்ளருந்தி மயக்கத்தில் திளைத்துப் பொழுதும்

நகர்வதும் பகர்வதுமாய் இருந்தது மன்மதப் பெருவிழா...



எள்ளி நகையாடும்  திசைகளிலும் யாவரும் யாவையும்

கொள்ளை ஒளியூட்டும் நிலவின் கோலமும் காலமும்

வாள் உறையும் மகரக் கொடியேந்தும் மன்மதனுக்கு

வெள்ளை அணிந்து விழாவெடுத்தது போலிருந்தது...



துள்ளி எழுந்து விளையாடத் துடிக்கும் திசைகளிலும்

வெள்ளி உருக்கி வார்த்ததன்  ஒளியும் பரவும்  வெட்டித்

தள்ளும் வாளும் கொடியும் படைகொண்டு  மாரனுக்கு

அள்ளிச் சூடும் வெள்ளணி விழாவை ஒத்திருந்தது...



கள்ளும் கசிந்துருகி காணுமிடம் எங்கும் ஓடிப்பெருகித்

துள்ளும் வண்ணம்  வெண்ணிலவின் ஒளியங்கே பருக

அள்ளும் கிண்ணம் போல் ஆசை தீர அள்ளிப்  பருகித்

தள்ளும் தள்ளாத  மயக்கத்தின்  மன்மத விழாவானது...





பாடல்:

எள்ள அருந் திசைகளோடு யாரும் யாவையும்

கொள்ளை வெண்  நிலவினால் கோலம் கோடலால்

வள் உறை வயிர வாள் மகரகேதனன்

வெள்ளணி ஒத்தது - வேலை ஞாலமே...



விளக்கம்:

இகழ்வதற்கு அரிய திசைகளுடனே, அத்திசைகளில் வாழும் உயிருள்ள

யாவரும் மற்றும்  உயிரற்ற பொருட்களும், அளவில்லா வெளிச்சத்தைக்

கொட்டி அளக்கும் வெண்ணிலவின் கோலம்  கொண்டதனால் கடலால்

சூழப்பட்ட இவ்வுலகமானது வலிமை பொருந்திய கூர்மை தங்கிய

வாளினையுடைய மகர (சுறா) மீனைக் கொடியாககக் கொண்ட மன்மதனுக்கு

வெள்ளுடையணிந்து விழா எடுத்தது போன்று  இருந்தது மது அருந்தும்

கேளிக்கைக் கூடமாகும்.

போற்றும் நிலவின் வீக்கத்தில் விளைந்த ஒளியே எனலாம்...



கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே மூன்றாவது 

பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...


தசரதனின் சேனைகள் வந்து தங்கிய மதுக்கூடத்தின் எழிலையும்

நிலவின் ஒளி வெள்ளத்தில் நனைந்து கொண்டு  இருக்கும்

பூம்பொழிலையும் விளக்குகின்றது இப்பாடல்...



தசரதனின் சேனைகள் வந்து தங்கி இருக்கின்ற மடமானது

தாங்கும் நிலவொளியின் பெருக்கத்தால் மதுக்கூடமானது

ஆசைரதமேறி உலவிவர மயக்கம் ததும்பும் இடமானது

ஆளும் உணர்வுகள் நடத்தும் அந்தரங்கப் பாடமானது...



சிந்தனைப் பலவும் உள்ளத்தில் உதிக்க அதிலே மதுவின்

நிந்தனைச் சிலவும் உணர்வினை மீட்ட மயக்கத்தைத்

தந்தனை உலவும் மடந்தையரைத் தேடிக் கொண்டாடிட

வந்தனை நிலவும் வார்த்தது ஒளிவெள்ளத்தை இரவிலே...



மிகவும் ரம்மியமாக மதுவருந்தும் சூழலும் தோகை விரித்தாடி

அகவும் மயிலும் அழைக்கும் மந்தார மேகத்தின் நடுவிலே

புகவும் நிலவின் ஒளியானது எங்கும் வெண்மையாய் அதற்குத்

தகவும்  அழகைச் சொரிந்து ஆனந்த மயக்கத்தில் ஆழ்ந்தது இரவு...



ஆற்றின் வெள்ளம் பொங்கிவரும் கங்கையைப் போலவும் பறை

சாற்றும் வண்ணம் திருப்பாற்கடலைப் போன்றது எனவும்  நின்று

கூற்றுவனை எட்டி உதைத்தவன் வாழும் கயிலையை ஒத்தது

போற்றும் நிலவின் வீக்கத்தில் விளைந்த ஒளியே எனலாம்... 



நதியின் வெள்ளம் எங்கும் வெண்மையாய்ப் புரண்டோடும்

கதியில் உள்ளம் பொங்கிப் பெண்மையும் திரண்டோடும்

மதியில் பள்ளம் பார்க்கப்  பெருகியெங்கும் உருண்டோடும்

விதியில் கள்ளும் கொஞ்சம் கலந்தது நிலவின் வீக்கம்...



ஊற்று வெள்ளம் போலெழுந்த மையலும் மெல்ல மெல்ல

ஆற்று வெள்ளம் போல் பிரவாகம் எடுத்து நிலவொளியின்

கீற்று வெள்ளம் எங்கும் பெருகியோடும் வெண்மையும் மது

ஊற்றின் உள்ளம் பொங்கி உணர்வும் உள்வாங்கியதன்றோ!





பாடல்:

ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்

கூறு பாற்கடலையே ஒத்த; குன்று எலாம்

ஈறு இலான் கயிலையே இயைந்த; என் இனி 

வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே!



விளக்கம்:

நிலவின் ஒளிவெள்ளத்தில் ஆறுகள் எல்லாம் கங்கையாற்றை ஒத்து இருந்தன என்றும்;

கடல்கள் யாவும் திருப்பாற்கடலை ஒத்து இருந்தன என்றும்;

மலைகள் யாவும் வெள்ளிப்பனி மலையாகிய சிவா பெருமான் வாழும் கயிலாய மலையை

ஒத்து இருந்தது என்றும்; இவையாவும் சொல்லவொண்ணா அளவு வீக்கத்தில் பெருத்த

நிலவின் தோற்றத்தாலே விளைந்து  இருந்தது இரவுப் பொழுதாகும்...

கடலாடிக் கரை காண மயங்கும் நிலவொளியில்...

கம்பராமாயணம், பால  காண்டத்திலே உண்டாட்டுப் படலத்தில்
இரண்டாவது பாடலை இங்கே பார்ப்போம்...
தசரதனின் சேனைகள் நீண்ட நெடு இரவிலே நிலவின் ஒளிவெள்ளத்தில்
மதுவை உண்டு மயக்கத்திலே மிதந்து கொண்டு இருந்தனர்.
மன்மதனின் வேண்டுதலுக்கு இணங்க உதித்த நிலவின் ஒளியானது
துணைவருடன் ஊடல்  (சண்டை) கொண்டவருக்கு கூடல் கொள்ளச்
சொல்லும் தூதுவனாகவும்,  இனிய கள்ளைப்  போலே இன்பத்தைத்
தருவதாகவும், பிரிந்து இருப்பவருக்கு உயிரைப் பறிக்கின்ற   
விடத்தைப் போலவும் நீண்ட நேரம் தண்ணொளி வீசி அந்த
இடத்தை அலங்கரித்த வண்ணம் இருந்தது.
மதுவருந்தினால் இன்ப வதை கூட தேவதையாகலாம்...
எதுவிருந்தாலும் இந்தக் கதை கூட பெருங்கதையாகலாம்...
பொதுவிலிருந்து அழைக்கும் யாமம் கூட காமம் ஆகலாம்...
அதுவிருந்தால் அலையும் வழிகள் கூட விழிகள் ஆகலாம்....
காற்றில் ஆடி விழுந்த நாணலும் நதியின் ஓட்டத்தில் மது
ஊற்றித் ததும்பி அசைகின்றதைப் போலே ஆட்டத்தில் ருது
ஏற்றித் தழுவத்  துடிக்கும் ஆசையும் நாட்டத்தில் மாதவளைப் 
பற்றிப் படர்ந்து கடலாடிக் கரை காண மயங்கும் நிலவொளியில்...
மங்கை முகம் கண்டோர்க்கு திரு மந்திரமும் தேவை இல்லை
மதுவை உண்டு கலந்தோர்க்கு ஒரு தந்திரமும் தேவை இல்லை
நங்கை சுகம் கொண்டோர்க்கு வேறு சுகம் தேவை இல்லை
நலத்துடன் கண்டு களித்தோர்க்கு வேறு யுகம் தேவை இல்லை...
தேடல் மிகுந்தோர்க்கு கிடைக்கின்ற திரவியமாய்
ஆடல் புகுந்தோர்க்கு இனிமைதரும் கள்ளுமாய்
ஊடல் பிரிந்தோர்க்கு உதவி செய்கின்ற தூதுவனாய்
கூடல் புரிந்தோர்க்கு நிலவும் மலர்ந்தது தோதுவாய்... 
அலந்தவர்க்கு அவர் வாய் விழுகின்ற கள்ளுமாய்
கலந்தவர்க்கு முன் போய் குத்தும் மோகமுள்ளுமாய் 
நலந்தவறும் மாந்தர்தம் நோய் தீர்க்கும் மருந்துமாய் 
மலர்ந்தது நிலவும் மாரன் கை தேர்ந்த வில்லுமாய்... 
சொல்லுக்குள் அடங்காமல் சுழல்கின்ற எண்ணமாய்
வில்லுக்குள் அடங்காமல் பாய்கின்ற அம்புமாய் 
புல்லுக்குள் அடங்காமல் பெய்கின்ற பனியுமாய்
செல்லுமிடத்தில் மலர்ந்தது காமமும் அம்புலியாய்...
பாடல்: 2
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது நெடு நிலா - மதனன் வேண்டவே
விளக்கம்:
ஆணும் பெண்ணுமாய் கூடி மகிழ்ந்து இருப்போர்க்கு இனிமை சேர்க்கும் மதுவாகவும் 
தன் துணையைப் பிரிந்து எண்ணி வருந்துவோர்க்கு உயிரைப் போக்கும் நஞ்சாகவும்
துணைவருடன் ஊடல் கொண்டவர்க்கு  உதவி செய்கின்ற புதிய தூதுவாகவும்
மன்மதனின் வேண்டுகோளுக்கிணங்க ஒளிமிக்க நிலவானது வானத்தில்  உதித்தது.

Thursday, March 21, 2013

உடலினுள் இருந்திட்டா​ல் பொங்குவது கள்ளாகும்.​..



கம்பராமாயணம், பால காண்டத்திலே நீர் விளையாட்டுப் படலமும்,

உண்டாட்டுப் படலமும் தான் ரசனை மிகுந்ததாக நான் கருதுகின்றேன்..


பால காண்டத்தில் இருந்து உண்டாட்டுப் படலத்தை

பற்றிய என்னுடைய
ரசனையில் முதலாவது பாடலை

உங்கள் பார்வைக்கு விருந்தாக்க இருக்கிறேன்...

படித்து ரசித்துப் பயன்பெறவும் - அநுபவம் உள்ளவர்கள் ருசித்துப் பலன்பெறவும்...



கம்பராமயணத்திலே இது பதினெட்டாவது படலமாக வருகின்றது...


இந்தப் படலத்திலே மதுவுண்டால் ஏற்படும் விளைவுகளை மிக
அழகாகப் படம் பிடித்துக்

காட்டுகிறார் கம்பர்.


ராமனுடைய திருமணத்திற்காக தசரதனின் சேனைகள் அனைவரும்


தத்தம் மனைவியரோடு வந்திருந்து விருந்திலே கலந்து கள்ளுண்டு

மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் மயக்கத்திலே ஆடுகின்ற நிகழ்வைத் தான் கம்பர்

உண்டாட்டுப் படலத்திலே தெளிவுறக்  கூறுகின்றார்...


கள்ளை உண்டு ஆட்டுவதாலேயே உண்டாட்டுப் படலம் என்ற  பெயரும் சூட்டியுள்ளார்...


ராமாயணக்  காலத்தில் பெண்களும் மதுவருந்தி மகிழ்ந்ததாக கம்பர் எடுத்துரைக்கின்றார்.




மயக்கத்திலே ஆணென்ன பெண்ணென்ன - கள்ளின்

இயக்கத்திலே ஊனென்ன உயிரென்ன - உணர்வின்

முயக்கத்திலே காமமும்  தான்பின்ன நடையின்

தயக்கத்திலே  யாமத்தில் தமை மறப்பதென்ன!



கள்ளும் உட்புகுந்து பெருகும் மயக்கத்திலே கனிந்த வாய்ச்

சொல்லும் உண்மையில் உருகும் வண்ணம் வாஞ்சையுடன்

உள்ளும்  புறமும் பொங்கி  வழியும் பேரின்பச் சுவைக்கூட்டச் 

செல்லும் பெண்மையினைத்  தேடியலைகின்ற உள்ளம்.....



நெருப்பிட்டால் பொங்குவது பாலாகும் - உடலினுள்

இருந்திட்டால் பொங்குவது கள்ளாகும் - யாமத்தின்

விருப்பிட்டால் பொங்குவது  தேடலாகும் - காமத்தின் 

விருந்திட்டால் பொங்குவது கூடலாகும்...




பாடல்: 1

வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்

பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்

உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்

தண் நிறை நெடு நிலாத் தழைத்தது எங்குமே




விளக்கம்:

வெள்ளை நிறக் கள்ளானது வெள்ளம் பெருகியது போலவும்

இசை உருக்கொண்டு இடையினிலே பரவியது போலவும்

உள்ளே நிறைந்து வழிகின்ற காமம் உள்ளடங்காமையால்

வெளியே ஒழுகியது போலவும் குளுர்ச்சி பொருந்திய

பெரும்நிலவானது தன்னொளியை வீசியது போலவும்

அங்கே கள்ளருந்தக் கூடிய  சூழல் இருந்ததாகக் கம்பர்

விளக்குகிறார்.