Sunday, November 24, 2013

எண்மயக்கம் கொண்டு அதரத்தில் கிண்ணம் வைத்தாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினெட்டாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



கண்மயக்கம் கொள்ளும் கோல மூக்கினாள் ஒருத்தி தான்

உண்மயக்கம் கொள்ளும் மதுவாலே முன்கை நடுங்கத்

தண்மயக்கம் கொடுக்கும் மது சிந்தியதை அறியாதவளும்

எண்மயக்கம் கொண்டு அதரத்தில் கிண்ணம் வைத்தாள்...



எள்ளுப்பூ நாசியாள் ஒருத்தி முன்கை தள்ள குளிர்ந்தக்

கள்ளுப்பூ விரியும் மயக்கத்தில் மதுவும் ததும்பிச் சிந்தும்

உள்ளப்பூப் படையும் வண்ணம் மயங்கித் திளைக்கும் மது

வெள்ளத்தில் இதழின் கீழ்மேலாகக் கிண்ணம் வைத்தாள்...



மூக்குத்தி அணிந்த எள்ளுப்பூ மூக்கினாள் ஒருத்தி தன்

போக்குத்தி அறியாத மயக்கத்தில் முன்கைத் தடுமாறும்

நாக்குத்தி வழிசெல்லாது இழியும் மதுவறியாது தலைகீழ்

தூக்கிய கிண்ணத்தைத் தன் இதழில் வைத்து அருந்தினாள்...



முந்தியது மயக்கம் தரும் எள்ளுப்பூ மூக்கினாள் ஒருத்தி

அந்தியது வழங்கும் மதுவின் நினைப்பால் முன்கையில்

ஏந்தியதும் அறியாது மயக்கும் மதுவும் தன்கை மீறியதில்

சிந்தியதும் தெரியாது கிண்ணந்தனை வாய் வைத்தாள்...



ருதுவழங்கும் உருமயக்கத்தையும் மீறும் ஒருத்தித் தன்னெழில்

அதுவழங்கும் ஒருமயக்கத்தின் துணையாகக் கிண்ணந்தனிலே

மதுவழங்கும் பெருமயக்கத்திற்கு இணையாக எண்ணந்தனிலே

எதுவழங்கும் கருமயக்கமும் இதற்கீடாமோ என்று அருந்தினாள்...






பாடல்:

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்திழை ஒருத்தி முன்கை

தள்ள தண் நறவை எல்லாம் தவசிடை உகுத்தும் தேறாள்

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உப்புறத்து உண்டு என்று எண்ணி

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள்...




விளக்கம்:

எள்ளுப் பூப்போன்ற அழகிய மூக்கினையுடையாளாய் அணிகலம் பூண்டாள்

ஒருத்தி முன்னங்கை நடுங்கியதால் குளிர்ந்த மது முழுவதும் தன் இருப்பிடத்தில்

சிந்திவிட்டதை சிறிதும் உணராதவளாய் உள்ளத்தில் உள்ள மதுவின் மயக்கத்தினால்

மதுக் கிண்ணத்தின் பின்புறத்தில் மதுவிருக்கும் என்று கருதி கிண்ணத்தை கீழ் மேலாகக்

பிடித்துக் கொண்டு மணி போன்ற சிவந்த அதரத்தில் வைத்துக் கொண்டாள்...



மயக்கத்தில் மதுவுண்டு தான் தலை கீழானாள்...

தயக்கத்தில் அதுவுண்டு தன் நிலைப் பாழனாள்...

No comments:

Post a Comment