Sunday, November 24, 2013

பெண்ணகத்தைக் குளிர்வித்தால் மது வார்ப்பேனென்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினேழாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...




கள்ளூற்றிய கிண்ணத்தில் தன் முகம் கண்ட மங்கையொருத்தி

உள்ளூற்றிய மதுவின் உணர்வால் மதியென மயங்கி உள்ளத்தின்

உள்வீற்றிருக்கும் துணைவனோடு ஊடல் நீங்கிய தேடல் கொண்டு

பள்ளிகொள்ள வெட்பு நீங்கிக் குளிர் தந்தால் மதுதருவேன் என்றாள்...



ஆடல் கொள்ளும் மங்கை உண்மதுவெறியில் கிண்ணத்தின் உள்

ஊடல் தெரியும் தன் முகப் பிம்பத்தை மதியெனவே நினைந்து

கூடல் கொள்ளும் பொருட்டுத் துணைவனோடு மகிழ்ந்திருக்க

சாடல் ஆனாள் தண்மதியானால் மதுவார்ப்பேன் உனக்கென்று...



கயல் விழியாள் ஒருத்தி மதுவுண்ட மயக்கத்தில் அந்தி வான

வியல் விடுத்து மதியானது கிண்ணத்தில் வீழ்ந்ததென முகச்

சாயல் கண்டு சாடினாள் வெப்பம் நீங்கிக் குளிர்வித்தால் தான்

மையல் கொண்டு மகிழ்ந்து மது உனக்கு வார்ப்பேனென்றாள்...



கிண்ணத்தில் தன் முகம் கண்ட ஒருத்தி மது மயக்கத்தில்

விண்ணகத்தின் நிலவு ஆசை கொண்டு வீழ்ந்ததெனத் தன்

எண்ணத்தில் நினைந்து துணைவனோடு காதல் கொள்ளும்

பெண்ணகத்தைக் குளிர்வித்தால் மது வார்ப்பேனென்றாள்...



உண்மது உள்ளூறிய மயக்கத்தில் தன் முகப் பிம்பத்தைப்

பெண்மதி ஒருத்தி மதுக் கிண்ணந்தனில் கண்டதும் அந்தி

விண்மதி என நினைந்து ஊடலின் பின்வரும் மையலைத்

தண்மதியாகிக் குளிர்வித்தால் மது தருவேன் என்றாளவள்...






பாடல்:

கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன முகத்தை நோக்கி

விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி

'உள் மகிழ் துணைவனோடு ஊடு நாள். வெம்மை நீங்கி

தண் மதி ஆகின் யானும் தருவென் இந் நறவை' என்றாள்...




விளக்கம்:

ஒரு மங்கையானவள் கள்ளினை வார்த்த அழகிய கிண்ணத்தின் உள்ளே

கள் வெறித் தோன்றும் தன் முகத்தின் பிரதிபிம்பத்தைக் கண்டு விண்ணில்

இருக்கும் மதி மதுவின் ஆசையால் கிண்ணத்துள் மதுவுண்ண வந்து வீழ்ந்து

கிடக்கிறது என நினைத்து மன மகிழ்ச்சி கொடுக்கும் என் கணவனோடு ஊடல்

கொள்ளும் காலத்து உன் இயல்புக்கு மாறாக வெப்பம் தருவதை நீக்கி குளிர்ந்த

நிலவாக நடந்து கொள்வாயானால் இம்மதுவை உனக்கு நல்குவேன் என்றாள்...



கள்ளூறியதால் மயங்கும் நிலைக்கு மாறினாள் - உள்ளத்தில்

உள்ளூறியதால் மறக்கும் நிலைக்கு மாறினாள் - நினைவில்

விண்மதியின் இயல்பு நிலையை மாற்றினாள் - வள்ளத்தில்

பெண்மதிதன் செயல் நிலையை ஏமாற்றினாள்...

No comments:

Post a Comment