Sunday, November 24, 2013

நீபயம் கொள்ள வேண்டாம் நான் இருக்கிறேன் என்கின்றாள்...




கம்பராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலத்திலே

பதினான்காவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...



பாம்புக்கு அஞ்சிய நிலவை மதுவினில் கண்ட மங்கை ஒருத்தி அதுவும்

பிம்பம் என்று அறியாது அவளும் மயங்கிக் கண் பொருத்தி அதற்கும்

தான்புக்க இடம் தந்து காப்பதாகவும் இனியும் அஞ்சாமல் எதற்கும்

வான்புக்க வேண்டாம் நானிருக்கின்றேன் என்று கட்டளையிட்டாள்...




களித்த மங்கையவள் கண் மயங்க கனங்குழை செவியிலே முயங்க

புளித்த கள்ளின் போதையிலே அதனுள்ளே தோன்றுகின்ற மதிக்கும்

அளித்தனள் அபயம் பாம்புகளுக்கு அஞ்சியே நிலவும் வந்தங்கே

ஒளிந்ததைக் கண்டு அஞ்சாதே! என்று இன்மொழிகள் கூறினாள்...



உபாயம் அளித்து உள்ளுக்குள் மயங்கும் மதுவின் காட்சியில்

அபாயம் என்ற பாம்புகளுக்கு அஞ்சிய நிலவும் கிண்ணந்தனில்

அபயம் என்றே ஒளிந்ததென்று அவளும் அதனைப் பார்த்து

நீபயம் கொள்ள வேண்டாம் நான் இருக்கிறேன் என்கின்றாள்...



குழையணிந்த ஒருத்தி தானும் மதுவருந்திய மயக்கத்தின்

பிழையறியாது மதுவினுள் தோன்றும் நிலவின் பிம்பத்தை

குழைந்து இரக்கம் கொண்டு அரவுக் கஞ்சிய நிலவின்பயம்

கழைந்திட அவளும் அஞ்சாதே என்று அபயம் அளித்தனள்...



கண் மயங்கும் கனங்குழையாள் ஒருத்தி மதுவினுள் அந்தி

விண் மயங்கும் நிலவும் விழுங்க வரும் பாம்புக்கு அஞ்சியே

வீண் பயந்து புகுந்ததென்றும் தானதற்கு தஞ்சம் அளிக்கவல்ல

பண் மயங்கும் மொழிகள் கூறி வானெதற்கு என்று தேற்றினாள்...



கனங்குழை காற்றிலாட மயங்கும் கண் மது ஊற்றிலாட கொடுஞ்

சினங்கொண்ட அரவினுக்கு அஞ்சிய நிலவும் மதுவினுள் தோன்ற

மனங்குழை மங்கையவள் அஞ்சாதே அரவு கண்டு இரவு உண்டு

தனங்கொண்ட நான் உனக்கு தஞ்சம் அளிப்பேன் என்று கூறினாள்...





பாடல்:

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனங்குழை கள்ளின் உள்ளால்

வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி

அளித்தனென் அபயம்; வானத்து அரவினை அஞ்சி நீ வந்து

ஒளித்தனை; அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்துகின்றாள்...




விளக்கம்:


அங்கே பொன்னாலியென்ற குழையணிந்த ஒருத்தி மதுவின் உள்ளே

பிரதிபலித்துத் தோன்றுகின்ற அழகிய நிலவின் பிம்பத்தை மதுவுண்டதனால்

வந்த களிப்பு தன கண்களில் தோன்றுமாறு பார்த்து மதியே நீ வானத்தில்

உன்னைத் தீண்ட வரும் பாம்புகளுக்கு அஞ்சியே இங்கு வந்து ஒளிந்திருக்கிறாய்,

ஆகையால் நான் உனக்கு அபயம் அளித்தேன் எனவும் அஞ்சாதே நான் இருக்கிறேன்

என்று இனிய மொழிகளும் கூறுகின்றாள்.

No comments:

Post a Comment