பத்தொன்பதாவது பாடலை உங்களது பார்வைக்கு முன் வைக்கிறேன்...
வண்டுகள் மொய்க்கும் வானளாவிய கூட்டமது யாசகரும்
வேண்டுவன எல்லாமும் பெற்றிடப் பெருஞ் செல்வந்தரைக்
கண்டுகொள்ளும் பிரிவு ஆற்றாமல் வாட்டம் கண்ட ஒருத்தி
ஈண்டு கள் உறிஞ்சக் குழலை நாடினாள் வாய்ப் புகுமென்று....
வானளாவிய பெருஞ்செல்வத்தை நாடும் யாசகர் கூட்டமும்
தேனுலாவிய பூக்களில் மொய்த்திடும் வண்டுகளின் கூட்டமது
பானகம் அருந்தத் தன் செவ்வாய்த் திறந்தால் உட்புகுமென்று
தானவளும் செங்கழுநீர்க் குழலெடுத்து உறிஞ்சத் தொடங்கினாள்...
வான் விரிகின்ற பெருஞ்செல்வம் தேடும் யாசகர் போலும்
தான் பிரிகின்ற துயரம் ஆற்றாமல் கூடும் கூட்டம் போலும்
தேன் சொரிகின்ற பூவில் வண்டுகள் கண்ட ஒருத்தி மேலும்
ஊன் மயங்கும் மதுவருந்த உறிஞ்சிக் குழலை நாடினாள்...
சூசகமாய் தன் வறுமை நீங்கச் செல்வந்தரை நாடிப் பொருள்
யாசகமாய் பெறுவோரின் பிரிவு ஆற்றாமல் கூட்டம் போலும்
வாசனைப் பூக்களில் தேன் மொய்க்கும் வண்டுகள் கண்டவளும்
யோசனை கொண்டு உறிஞ்சிக் குழலெடுத்து மதுவருந்தினாள்...
போயும் பெருஞ் செல்வந்தரிடம் பெறுகின்ற யாசகர்கள் போலும்
தோயும் மலர் மொய்த்து தேன் குடிக்கும் வண்டுகளின் கூட்டமும்
வாயும் மது அருந்தத் திறந்தால் உட்புகுமென்று ஒருத்தி கருதி
சாயும் செங்கழுநீர்க் குழலெடுத்து அதன் மூலம் உறிஞ்சினாள்....
பாடல்:
வான்தனைப் பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப
தேன் தரு கமலச் செவ்வாய் திறந்தனள் நுகர நாணி
ஊன்றிய கழுநீர் நாளத் தாளினால் ஒருத்தி உண்டாள்...
விளக்கம்:
உலோபிகளிடம் பொருந்திய பெருஞ்செல்வத்தை பெறுவதற்காக விரும்பி
வந்துள்ள யாசகர்கள் போல்பிரிய மாட்டாமல் வான் அளவும் மொய்த்துக்
கொண்டுள்ள வண்டுகளின் கூட்டம் கண்ட ஒருத்தி தேன் சொரிகின்ற
தாமரைப் பூப் போன்ற தன் சிவந்த வாயை திறந்தால் வண்டுகள் உட்சென்று
விடுமென்று நாணமுற்று கிண்ணத்தில் ஊன்றி வைத்த செங்கழுநீரின்
தண்டினால் மதுவை உறிஞ்சி உண்டாள்...
வண்டுகளையும் உட்கொள்ள நேரும் அபாயம் உள்ளது மது உண்ணும்
பழக்கம் என்றதன் இழிவைச் சுட்டிக் காட்டுகிறார் கம்பன். இன்று
குளிர்பானங்களை பல்லில் படாமல் உறிஞ்சி குழலால் பருகும்
அன்றே இருந்ததை அறிக...
No comments:
Post a Comment