கம்பராமாயணம், பால காண்டத்திலே நீர் விளையாட்டுப் படலமும்,
உண்டாட்டுப் படலமும் தான் ரசனை மிகுந்ததாக நான் கருதுகின்றேன்..
பால காண்டத்தில் இருந்து உண்டாட்டுப் படலத்தை
பற்றிய என்னுடைய ரசனையில் முதலாவது பாடலை
உங்கள் பார்வைக்கு விருந்தாக்க இருக்கிறேன்...
படித்து ரசித்துப் பயன்பெறவும் - அநுபவம் உள்ளவர்கள் ருசித்துப் பலன்பெறவும்...
கம்பராமயணத்திலே இது பதினெட்டாவது படலமாக வருகின்றது...
இந்தப் படலத்திலே மதுவுண்டால் ஏற்படும் விளைவுகளை மிக அழகாகப் படம் பிடித்துக்
காட்டுகிறார் கம்பர்.
ராமனுடைய திருமணத்திற்காக தசரதனின் சேனைகள் அனைவரும்
தத்தம் மனைவியரோடு வந்திருந்து விருந்திலே கலந்து கள்ளுண்டு
மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் மயக்கத்திலே ஆடுகின்ற நிகழ்வைத் தான் கம்பர்
உண்டாட்டுப் படலத்திலே தெளிவுறக் கூறுகின்றார்...
கள்ளை உண்டு ஆட்டுவதாலேயே உண்டாட்டுப் படலம் என்ற பெயரும் சூட்டியுள்ளார்...
ராமாயணக் காலத்தில் பெண்களும் மதுவருந்தி மகிழ்ந்ததாக கம்பர் எடுத்துரைக்கின்றார்.
மயக்கத்திலே ஆணென்ன பெண்ணென்ன - கள்ளின்
இயக்கத்திலே ஊனென்ன உயிரென்ன - உணர்வின்
முயக்கத்திலே காமமும் தான்பின்ன நடையின்
தயக்கத்திலே யாமத்தில் தமை மறப்பதென்ன!
கள்ளும் உட்புகுந்து பெருகும் மயக்கத்திலே கனிந்த வாய்ச்
சொல்லும் உண்மையில் உருகும் வண்ணம் வாஞ்சையுடன்
உள்ளும் புறமும் பொங்கி வழியும் பேரின்பச் சுவைக்கூட்டச்
செல்லும் பெண்மையினைத் தேடியலைகின்ற உள்ளம்.....
நெருப்பிட்டால் பொங்குவது பாலாகும் - உடலினுள்
இருந்திட்டால் பொங்குவது கள்ளாகும் - யாமத்தின்
விருப்பிட்டால் பொங்குவது தேடலாகும் - காமத்தின்
விருந்திட்டால் பொங்குவது கூடலாகும்...
பாடல்: 1
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்
தண் நிறை நெடு நிலாத் தழைத்தது எங்குமே
விளக்கம்:
வெள்ளை நிறக் கள்ளானது வெள்ளம் பெருகியது போலவும்
இசை உருக்கொண்டு இடையினிலே பரவியது போலவும்
உள்ளே நிறைந்து வழிகின்ற காமம் உள்ளடங்காமையால்
வெளியே ஒழுகியது போலவும் குளுர்ச்சி பொருந்திய
பெரும்நிலவானது தன்னொளியை வீசியது போலவும்
அங்கே கள்ளருந்தக் கூடிய சூழல் இருந்ததாகக் கம்பர்
விளக்குகிறார்.
No comments:
Post a Comment